Wednesday, December 8, 2010

பென் ஸ்டாண்ட் செய்முறை

நம் அன்புக்குரியவர்களுக்கு பரிசு கொடுக்கும்போது அது சிறிய பொருளாக இருந்தாலும், நம் பங்களிப்பு அதில் இருக்கும் போது அதிக மகிழ்ச்சி தருவதாகவே உள்ளது.

மிகக் குறைந்த செலவில் சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் செய்யும் முறையை சொல்லித்தருகிறேன்.


பாப்பி குச்சிக‌ள் என‌ப்ப‌டும் ஐஸ்கிரீம் குச்சிக‌ள்  30
பெவிகால்  தேவையான‌ அள‌வு
துருவிய‌ சோப் அல்ல‌து மைதாமாவு   1 க‌ப்
தெர்மோகோல்
க‌ல‌ர் ப‌வுட‌ர் உங்க‌ள் விருப்ப‌மான‌ க‌ல‌ர்க‌ளில்  10 கிராம்
கலர் பவுடர்க்கு  பதிலாக கட்டிப்பட்டுப் போன இங்க் கூடப் பயன்படுத்தலாம்

7 ஐஸ் குச்சிகளை ஒன்றன் அருகில் மற்றொன்று வைத்து பெவிகால் கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.சற்று நேரம் காயவிடவும்.ஒரு குச்சியை குறுக்கு வாக்கில் அதன் மேல் வைத்து ஒட்டி விடவும். இது பார்ப்பதற்கு பலகை போலத் தோன்றும்.
இதேபோல 4 பலகைகள் செய்யவும்.

குறுக்கில் ஒட்டிய குச்சி உள் பக்கம் இருக்குமாறு நான்கு பலகைகளையும் சதுர வடிவில் வைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி விடவும்.தெர்மோகோல் ஒரு பகுதியை சதுர வடிவில் பென் ஸ்டாண்டின் அளவுக்கேற்றவாறு கட் செய்து அதனை பென் ஸ்டாண்டின் அடிப்பகுதியில் பெவிகால் துணையுடன் ஒட்டி விடவும்பென்ஸ்டாண்ட் தயார்.

துருவிய சோப் அல்லது மைதா  மாவுடன் தேவையான வண்ணம்,பெவிகால் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

சுண்டைக்காய் அளவு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
உருண்டையை நீளவாக்கில் இழுத்து பூ இதழ் போலச் செய்யவும்.இதேபோல் 5 இதழ்கள் செய்து பென்ஸ்டாண்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் ஒட்டி விடவும்.இதேபோல் இலைகள் காம்பு போன்றவையும் செய்து ஒட்டி விடவும்.
பென் ஸ்டாண்டின் மற்ற பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் பூசவும்

Friday, November 12, 2010

எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை முறைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கும், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் உலகின் பெரும்பாலான மனிதர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.அதில் வெற்றி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.சிலர் இதை குணப்படுத்துவதாகக் கூறும் பணம் பறிக்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு ஏமாந்து போவதும் உண்டு.
இதற்கு இரண்டே வழிமுறைகள் தான் உள்ளன.
1.உணவுக்கட்டுப்பாடு
2.உடற்பயிற்சி
இவை இரண்டையும் பின்பற்றுவது பலருக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.உளவியல் ரீதியிலான சில வழிமுறைகள் இதனை எளிதாக்கும்.

உணவுக் கட்டுப்பாடு என்பதை இரு வகைகளில் பின்பற்றலாம்.
1.உணவை ஒரே சமயத்தில் அதிக அளவு உண்ணாமல் பிரித்து பிரித்து உண்பது

ஆனால் உண்ணும்போது வயிறு நிறைய வேண்டும் என்னும் திருப்திக்காகவே, உண்ணும்  உணவைக் குறைக்க முடியாமல் தவிப்பவர் ஏராளம். சிறிது உண்ட உடனேயே உங்கள் வயிறு நிறைந்துவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.அவ்ளோதான்.இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது என்று உங்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டே சாப்பிடுங்கள்.சிறிது உணவிலேயே வயிறு நிறைந்த திருப்தி  ஏற்படும்.பசிக்கும் போதெல்லாம் இதே வழிமுறையைப் பின்பற்றுங்கள்.உணவின் அளவு கண்டிப்பாய் குறையும்.

2.கொழுப்பு ச‌த்து நிறைந்த‌ உண‌வினைத் த‌விர்த்தல்.
 சாக்லேட்,இனிப்பு வ‌கைக‌ள்,ஐஸ்கிரீம் போன்ற‌வ‌ற்றைக் காணும் போதே அத‌னுள் அட‌ங்கியுள்ள‌ கொழுப்பு ச‌த்து,க‌லோரி அள‌வைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள். ஒரு  சாக்லேட்டினால் அதிக‌ரிக்கும் க‌லோரிக்காக‌ நீங்க‌ள் அடிஷ‌ன‌லாக‌ செய்ய‌ வேண்டிய‌ உட‌ற்பயிற்சியின் அள‌வையும் அவ்வாறு செய்ய‌த்த‌வ‌றினால் அதிக‌ரிக்கும் உட‌ல் எடை அல்லது ச‌ர்க்க‌ரை அள‌வு அதிக‌ரிப்பை யோசியுங்க‌ள். கொழுப்பு ச‌த்து உண‌வுக‌ள் மீதான‌ மோக‌ம் ப‌டிப்ப‌டியாக‌க் குறையும்.


அடுத்த‌ முக்கிய‌ கார‌ணி உட‌ற்ப‌யிற்சி.

இத‌ற்காக‌ நேர‌ம் ஒதுக்குவ‌து மிக‌க் க‌டின‌மான‌ காரிய‌ம். அதிகாலை வாக்கிங் மிக‌ச் சிற‌ந்த‌ உட‌ற்ப‌யிற்சி.ஆனால் அத‌ற்காக‌ அதிகாலையில் உற‌க்க‌த்தை விட்டு எழுவ‌திலும் பெரும் கொடுமையாக வேறெதுவும் தோன்றுவ‌தில்லை.இத‌னை த‌விர்க்க‌ உங்க‌ள் வாக்கிங்குட‌ன் ஏதேனும் ஒரு வேலையை இணைத்துக் கொள்ளுங்க‌ள். அதிகாலையில் ந‌ட‌ந்து சென்று பூஜைக்கு ம‌ல‌ர் கொண்டுவ‌ருவ‌து,வீட்டிற்குத் தேவையான‌ சிறு பொருட்க‌ள் ஏதும் வாங்குவ‌து போன்ற‌வை ந‌டைப‌யிற்சியைக் க‌ட்டாய‌மாக்கிவிடும்.ஆனால் இதே போல‌ வாங்கும் பொருட்க‌ள் சிறிய‌தாக‌வும் ந‌டைப் ப‌யிற்சிகு த‌டை ஏற்ப‌டுத்தாமலும் இருக்க‌ வேண்டும்.கிலோ க‌ண‌க்கில் எடையுள்ள‌வ‌ற்றை தூக்கிக் கொண்டு ந‌டை ப‌யிற்சி மேற்கொள்வ‌து ப‌ல‌னளிக்காது.

Think Smart.Stay Fit

.

Thursday, November 11, 2010

சிறந்தென்ன இருக்கிறது ?




அந்தி மாலை
ஆண்டுகள் கடந்த சந்திப்பு
இனிக்கும் புன்னகை
துவ‌ளும் சொற்க‌ள்
க‌ண்க‌ளின் க‌ள்ள‌த்த‌னம்
சொல்பேசா ச‌ம்ம‌த‌ம்
ம‌ல‌ரும் ம‌ன‌ம்
தோள் சேர்ந்த‌ மல‌ர்க‌ள்
இணை சேர்ந்த விரல்கள்
உன் மேல் ததும்பி வரும்
காதலினும் சிறந்தென்ன
இருக்கிறது எவ்வுலகிலும்?

.

Wednesday, November 10, 2010

டிட் பிட்ஸ்

Smile:
It is a curve which makes many things straight

Teacher:
A person who has the bad habit of talking while others sleeping

Antique:
First generation Buys
Second Generation Neglects
Third generation Treasures

Nurse :
A person who wakes u up to give you sleeping pills.

Conference :
 The confusion of one man multiplied by the number present.

Politician :
One who shakes your hand before elections and your Confidence after.

Etc. :
A sign to make others believe that you know more than you actually do.



Today's Philosophy:
Poor man walks miles and miles to earn food
Rich man walks  miles and miles to digest  food.



.

Tuesday, November 9, 2010

குழந்தைகளை உண்மையிலேயே "வளர்க்கிறீர்களா"?

குழந்தை வளர்ப்பு என்பது உடல் வளர்ச்சியையும் வயது அதிகரித்தலையும் மட்டும் குறிப்பதல்ல.சமுதாயத்தையும்,எதிர்காலத்தையும் சந்திக்க மனரீதியாக அவர்களைத் தயார்ப்படுத்தலையும் குறிக்கும்.அத்தகைய தயார்படுத்தலை இந்த அவசர உலகில் பெரும்பாலான பெற்றோர் தவறவிடுகின்றனர்.அதனாலேயே பல குழந்தைகள்  பெரும் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
அத்தகைய தயார்படுத்த நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை சில‌
1.அவர்கள் சிறு,சிறு தவறுகள் செய்யும்போது,அச்செயலின் பின்விளைவுகளை அவர்களுக்கு புரியும்படி எடுத்துரைக்க வேண்டும்.அவ்வாறல்லாமல் பொதுவாக அவர்களை "அப்படிச் செய்யாதே" எனமிரட்டுவதும்,தண்டிப்பதும் பெற்றோருக்குத் தெரியாமல் அச்செயலைச் செய்யவே தூண்டும்.
அதே தவறுகளை திரும்ப திரும்பச் செய்தால் மட்டுமே தண்டனை என்னும் முயற்சியைத் தொடங்க வேண்டும்

2.வீட்டின் பெரியவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள்,நெகடிவ் பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு அறியத் தருவது பெரியவர்களின் மீதான குழந்தைகளின் நல்லெண்ணத்தைக் குலைக்கும்
3.போட்டி நிறைந்த உலகத்தில் அடுத்த குழந்தைகளுடனான ஒப்பீடு தவிர்க்க முடியாதது.அதனை பாசிடிவ் ஒப்பீடாகச் செய்யலாம்."அந்தக் குழந்தையைப் போல நீ இல்லை" எனச் சொல்வதை விட,அந்தக் குழந்தை மாதிரி அடுத்த முறை நீ வெல்வாய் எனச் சொல்வது நன்மையளிக்கும்
4.குழந்தைகளின் எவற்றாயெல்லாம் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ அவற்றையெல்லாம் நாமும் தவிர்க்க வேண்டும்.உதாரணமாக, நீ போய் படி எனக் கூறிவிட்டு நான் தொலைக்காட்சியில் மூழ்கக் கூடாது
5.அவர்கள் பேச வரும் விஷயங்களை நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.அவர்கள் தவறே செய்தாலும்,அதை நம்மிடம் ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் தைரியத்தை நாம் தான் அவர்களுக்குத் தர வேண்டும்.
பெற்றோரின் அனுபவ‌த்தில்,இதனினும் பெரிய பாடங்கள் எல்லாம் கற்றுக் கொண்டிருப்பீர்கள்.எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளை எழுதியிருக்கிறேன்.உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

.

பிற்பகல் விளைந்தது

நகரின் தலை சிறந்த மருத்துவமனை.தன் முன் ஓளிரும் டிஜிட்டல் தேதி 09/09/2050 யைப் பார்த்த‌தும் த‌லைமை ம‌ருத்துவ‌ர் சாம் ம‌ன‌ம் க‌வ‌லையில் ஆழ்கிற‌து.
"ஹ்ம்ம்.தாத்தாவை அட்மிட் ப‌ண்ணி ஒரு மாச‌ம் ஆயிடுச்சு.இன்னும் அவரை நம்மால் குணப்படுத்த முடியவில்லையே.இந்நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் அவர் காப்பாற்ற முடியாத அபாய கட்டத்தை எட்டி விடுவாரே"
பெற்றோரை இழ‌ந்த தம்மை சிறு வ‌ய‌து முத‌ல் உயிராய் வ‌ளர்த்து, ப‌டிக்க‌ வைத்து, நல்ல நிலைமையில் வைத்ததற்கு அவருக்கு செய்யும் நன்றிக்கடன் இதுதானா என அவரது மனக்குதிரை தறிகெட்டு ஓடுகிறது.
அவ‌ர‌து இமெயில் அலாரம் ஒலிக்கிற‌து.அதில் அவ‌ருக்கு கிடைத்த‌ செய்தி.உல‌கின் த‌லைசிற‌ந்த‌ ம‌ருத்துவ‌ர் ஒருவ‌ரிட‌ம் அவ‌ர‌து தாத்தாவின் மெடிக‌ல் ரிப்போர்ட்டை ரெப‌ர் செய்தத‌‌ன் ப‌ல‌னாக‌ கிடைத்த‌ அம்ம‌ருத்துவ‌ரின் க‌ன்ச‌ல்டேஷன் ரிப்போர்ட்.
அதில்
"இந்நோயை குண‌ப்ப‌டுத்த‌ கோக‌ஸ் நியூசிபெரா என்னும் மூலிகையால் ம‌ட்டுமே முடியும்.அம்மூலிகை காயின் நீரினை மரத்திலிருந்து பறித்த உடனே ரத்தக் குழாயில் செலுத்துவதால் இந்நோய் முழுமையாக குணமடையும்" என்னும் வ‌ரிக‌ளைப் பார்த்த‌தும் அவ‌ர‌து ம‌ன‌ம் ச்ந்தோஷ‌த்தில் துள்ளிக் குதிக்க ஆர‌ம்பிகிறது.
தேங்க் காட்! எப்ப‌டியோ ஒரு ம‌ருந்து கிடைத்துவிடும் என்னும் ந‌ம்பிக்கையில் அம்மூலிகையின் விவ‌ர‌ங்க‌ளைத் தேடுகிறார்.ஆங்கில‌ ம‌ருத்துவ‌ம்,இந்திய‌ ம‌ருத்துவ‌ம் எல்லா ம‌ருத்துவ‌முறைக‌ளையும் தேடி  சாம் பெற்ற விவ‌ர‌ங்க‌ள்.
 சில பத்தாண்டுக‌ளுக்கு முன் இம்மூலிகை ப‌ர‌வ‌லாக‌ விளைந்தது.பின்ன‌ர் ம‌க்க‌ளின் சுற்றுப்புறச் சூழல் விழிப்புண‌ர்வு குறைவால் இத‌ன் விளைச்ச‌ல் நின்று போய்விட்ட‌து. உல‌கில் மிக‌ச்சில‌ இட‌ங்க‌ளில் அரிதாக‌வே கிடைகிற‌து.சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ரே ப‌திவு செய்துவைத்தால் ம‌ட்டுமே தூய்மையான‌ மூலிகை நீர் கிடைக்கும்.

என்ன‌ செய்வ‌தென‌ப் புரியாத‌ சாம் த‌ன் தாத்தாவிட‌மே சென்றார்.தாத்தாவின் க‌ட‌ந்த‌ கால‌ மூலிகை அறிவு ஏதேனும் வ‌ழி சொல்லும் என்னும் ந‌ம்பிக்கையுட‌ன்.

தாத்தா! உங்க‌ளுக்கு என்ன‌ ம‌ருந்து கொடுக்க‌லாம்ன்னு எக்ஸ்ப‌ர்ட் ஒபீனிய‌ன் குடுத்துருக்கார் தாத்தா.அவ‌ர் கோக‌ஸ் நியூசிபெரான்னு ஒரு மூலிகை பேர் சொல்லி இருக்கார்.அது குடுத்தா உட‌னே குண‌மாகிடும்ன்னு சொல்றார்.இல்லன்னா கஉயிருக்கே ஆபத்து ஆகிடும்ன்னு சொல்றார்.ஆனால் அது உல‌க‌த்துல‌ எங்க‌ தேடினாலும் உட‌னே கிடைக்காதாம்.சில‌ மாத‌ங்க‌ளாவ‌து ஆகுமாம்.உங்க‌ளுக்கு இந்த‌ மூலிகை ந‌ம்ம‌ ப‌க்க‌ம் எங்கும் விளையுமான்னு தெரியுமான்னு பாருங்க‌ தாத்தா

அந்த‌ப் பேர் நான் கேட்டதில்லையேப்பா..
பேர் தெரிய‌லின்னா ப‌ர‌வாயில்ல‌ தாத்தா, அம்மூலிகை மரத்தோட ப‌ட‌ம் காட்ட‌றேன் பாருங்க‌.

காட்டு! என‌ப் பார்த்த தாத்தா ராஜாவின் க‌ண்ணில் தெரிந்தது தென்னை ம‌ர‌ம்.
அதையும் தாண்டி அவ‌ர‌து ம‌ன‌க்க‌ண்ணில் தெரிந்த‌து அவ‌ர‌து இள‌மை ப‌ருவ‌த்தில் அவ‌ரது குடும்ப‌த்துக்குச் சொந்தமாயிருந்து,அவரது ப‌ண‌த்தாசையால் த‌ன் த‌ந்தையின் சொல்லை மீறி அழிக்க‌ப்ப‌ட்டு,வீட்டு நிலமாகி அபார்ட்மெண்ட் ஆகிப்போன‌‌ தென்ன‌ந்தோப்பு..

.

Sunday, November 7, 2010

தமிழ் போல இழிபடுவ‌து

தாய்த் தமிழ் நமக்கு கேவலமா?
 அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த விவாதம் தமிழ் ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்கிறதா என்பதைப் பற்றி."யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபொல் இனிதாவதெங்கும் காணோம்" எனச் சிலாகிக்கப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் கற்றுக் கொடுப்பவர்களைப் பற்றி கேவலமாக விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது.இதே போன்ற விமர்சங்களை வேறு துறை ஆசிரியர்கள் பற்றி பொதுவில் வைக்கத் துணிவுள்ளதா இவர்களிடம்.
தமிழ் ஆசிரியர்கள் மீது இவர்கள் வைக்கும் விமர்சனங்கள்
1.2.தமிழில் பேசச் சொல்கிறார்கள்
ஆம்.அவர்கள் தமிழில் பேசச் சொல்வது,ஒரு மொழியையாவது நீ உருப்படியாய் கற்றுக் கொள்ள.எந்தத் தமிழ் ஆசிரியராவது தமிழை மற்றும் கற்றுக் கொள்.ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறாதே என்று சொன்னார்களா? ஆங்கில ஆசிரியர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசச் சொன்னால் வராத கோவம் தமிழ் ஆசிரியர்களிட‌த்தில் மட்டுமே வருவது ஏனோ?
கணினித் துறையின் மனித வள மேம்பாட்டுத்துறையில் சொல்வார்கள்.வேறு துறை மாணவனை பணிக்குத் தேர்ந்தெடுக்கும்போது அவனது துறை சார்ந்த அறிவை சோதிப்பது,கண்ணி அறிவை சோதிப்பதிலும் மிக முக்கியம் ஏனெனில் அதன் மூலமே அவனது உண்மையான கற்கும் திறனை அறிய முடியும்.அதேபோல தமிழ் ஆசிரியர்கள் சொல்வது ஒரு மொழியை ஒழுங்காக கற்றுக் கொண்டால் அதனை வைத்து மற்று எத்தனை மொழிகளையும் சுலபமாகக் கற்கலாம்.உன் சொந்தக் கண் மூலம் பார் எனபது ஆசான்கள் காட்டும் வழி.இரவல் கண்ணாடி மூலம் தான் பார்ப்பேன் என்பது விதண்டாவாதம்.
2.தமிழ் கற்பதால் பயன் இல்லை
இன்றைய உலகை சற்று தொலை நோக்குங்கள்.அனைத்து துறைச் செய்திகளையும் தமிழ்படுத்தும் முறைமைகள் பரவலாகத் தொடங்கிவிட்டன.அதனில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டாலே போதும் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு அமையும்.
தமிழின் அருமையை உணர வேண்டுமானால்,தமிழ் புழங்காத வெளி நாட்டில் வாழும் ஒரு தமிழனிடம் பேசிப் பாருங்கள்.அப்போது புரியும் தமிழின், தமிழ் ஆசிரியர்களின் அருமையும் பெருமையும்

.

Saturday, November 6, 2010

விளை நிலங்கள் விலை நிலமாவதா?

 இன்றைய‌ வானுய‌ர் க‌ட்ட‌ட‌ங்க‌ளைப் பார்க்கும்போது,ஒரு ப‌க்க‌ம் ம‌ன‌தில் ம‌கிழ்வு தோன்றினாலும்,
 ம‌றுபுற‌ம் அத‌ன‌டியில் புதையுண்டிருக்கும் ஆயிர‌மாயிர‌ம் ஏக்க‌ர் விளை நில‌ங்க‌ள் நெஞ்சைப் ப‌தைக்க வைக்கின்றன.சில‌ ப‌த்தாண்டுக‌ளுக்கு முன் இருந்த‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ளில் 60%க்கும் அதிக‌மான‌வை வீட்டு நில‌ங்க‌ளாக‌ மாறிவிட்டன‌.ப‌ல‌ விவ‌சாயிக‌ள் விவ‌சாய‌த்தை விட்டு உப‌ தொழில்க‌ளைத் தேட‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர்.அத‌ற்கான‌ மிக‌ப் பெரும் கார‌ண‌ம் விவ‌சாய‌த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ற்றாக்குறை,விளை பொருட்க‌ளை சேமிப்ப‌தில் இருக்கும் பிர‌ச்சினைகள்,நிலத்தை வீட்டு மனையாக்குவதால் கிடைக்கும் பெரும் லாபம்.விவசாயிகள் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது வீட்டு நிலன்களாக்குவது பயன் தரும் செயல் தான்.ஆனால் ஒரு சமுதாயத்தின்,ஒரு நாட்டின் எதிர்காலம் இச்செயல் மூலம் பாழாகிறது.தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.இதே நிலை நீடித்தால், நம் தாய்த்திரு நாட்டிற்கே உணவுப் பஞ்சம் வரும் என்பது திண்ணம்.இதை எல்லாம் சரி செய்ய வேண்டியது அரசாங்க‌த்தின் கடமை என்றும்,அரசு ஏதும் செய்யவில்லை என்
ரும் குறை கூறுவது மட்டும் தீர்வாகாது.இதிலிருந்து தப்பிக்க நாம் வழிகளைக் கண்டாக வேண்டும்.சில மாற்றங்களைக் கொண்டுவருவதால் மிகப் பெரும் பசுமைப் புரட்சியைக் கொண்டு வரலாம்.
1.நிலத்தில் போட்டால் அழியாது எனக்கூறி ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி தரிசாகப் போட்டு,அதனை ஒரு முதலீடாக்கும் எண்ணத்தைக் குறைக்க வேண்டும்.
2.சம்பாதிக்கும் நகர இளைஞ்ர்கள் விவசாயிகளுக்கு உதவ முன் வர வேண்டும்.அவர்களால் உடல் உழைப்பைத் தர முடியாவிட்டாலும்,கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் பொருளாதார உதவிகளைச் செய்ய முன்வரலாம்.
3.விவசாய வேலை செய்பவர்கள், குறைந்தவிட்ட‌ காரணத்தால் விவசாயிகள் எந்திரங்களின் உதவியை நாடும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
4.உழவர் சந்தை போன்ற அமைப்புகளை,குடியிருப்பு சங்கங்கள் அருகிலுள்ள கிராம விவ‌சாயிக‌ளின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்த முனையலாம்.சிறந்த பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதோடு,விவசாயிகளுக்கும் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும்
5.நவீன விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு கற்றுத் தருவதன் மூலம் குறைந்த செலவில், நிறைந்த மகசூலையும்,லாபத்தையும் பெறலாம்.
அடுத்த தலைமுறைக்கு அன்னை பூமியை அளிக்கப் போகிறோமா அல்லது வெறும் மண்ணைத் தரப் போகிறோமா என முடிவு செய்வது நம் கையில்தான் உள்ளது

புதிய சிறகுகள்-விமர்சனம்

அண்மையில் படித்த ராஜம் கிருஷ்ணனின் "புதிய சிறகுகள்" சிறுகதையை உங்களிடையே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.
இரு தலைமுறைப் பெண்களின் வாழ்வியல் கோட்பாடுகளை அருமையாகச் சொல்லும் கதை.கடந்த தலைமுறை தாயான அபிராமியின் வாழ்வியல் அணுகுமுறைகள்,மகன் மீதான பாசம்,சமுதாயத்தின் சொல்லுக்கு அஞ்சும் பயம் போன்றவையும்,இத்தலைமுறைப் பெண்ணான சுபாவின் தெளிவான எண்ணங்கள்,செயல்கள்,முடிவெடுக்கும் பாங்கு போன்றவை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.அடுத்தவர் வாழ்க்கையில் அவல் தேடும் சுற்றுப்புற மக்கள்,அதே மக்கள் அவசர காலங்களில் செய்யும் உதவி இவையெல்லாம் ஒரு நடுத்தர குடும்ப வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.குடும்ப மானத்தைக் காப்பதாய் நினைத்து செய்யும் சில செயல்கள் வாழ்க்கையையே தடம் புரள வைக்கும் என்ப‌தும்,தேவைப்பட்டால் வெட்டி விடவும்,வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை திண்ணமாக உணர்த்துகிறது கதை.கதை சொல்லப்பட்ட பாங்கு காட்சிகளை கண்முன் விரிக்கிறது.இதே போன்ற குணநலன் கொண்ட நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மக்கள் நம்மை அறியாமலேயே கதைக்குள் வந்து அமர்ந்து கொள்கிறன்றனர். ‌கதையின் இறுதியிலாவது சீனி திருந்த மாட்டானா என்ற எதிர்பார்ப்பை வளர்த்திக்க் கொண்டே இருக்கிறது.ஆனால் அத்தகைய முடிவு இருந்தால் அது சினிமாத்தனமானதாகத் தான் இருந்திருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.தகுதிக்கும் மீறி குருட்டுச் செல்லமாய் வளர்க்கப்படும் பிள்ளைகள் எக்காலத்திலும் திருந்துவதில்லை என்பதை புடம் போட்டு விளக்குகிறது.அருமையான கதை.

கதையைப் படிக்க வேண்டுமா. இங்கே கிளிக் பண்ணுங்க‌

Friday, November 5, 2010

சந்தேகம்ஸ்

தீபாவளி சந்தேகங்கள்
1.தீபாவளியே கொண்டாடாமல் பட்டாசு எல்லாம் காசக் கரியாக்கற வேலைன்னு சீன் போடறவங்க கூட தலை தீபாவளின்னா பட்டாசு மத்தாப்புன்னு மணிக்கணக்குல கொளுத்தறாங்களே.மாமனார் காசுங்கிற மெதப்பா இல்ல மனைவி முன்னாடி காட்டற கெத்தா?

2.தீபாவளிக்கு அளவில்லாமல் பட்சணங்களையும் சாப்டுட்டு,அது ஜீரணமாக லேகியத்தையும் சாப்பிட‌றது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா?

3.தீபாவளிக்கு மொபைல் கம்பெனிகாரன் சார்ஜ் பண்ணாலும் பரவாயில்லைன்னு எஸ்.எம்.எஸ் அனுப்பி வாழ்த்தற உறவுகள்,மீதி நாள்ல ஃப்ரீ எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப மாட்டேங்கறாங்களே? விஷ்  பண்றதும் பேஷன் ஆயிடுச்சோ?

வருக! வணக்கம்!!நல்வரவு!!!


இசைஎன்பது எக்காலத்திலும் அனைவரின் விருப்பத்திற்குரியதொன்று.அதே போல் இந்த இசையின் எண்ணங்களும் அனைவரின் விருப்பத்திற்கும் உரியதாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் உங்களிடையே இனித் தென்றலாய்த் தவழ முயல்கிறாள் இந்தக் கவின் இசை.